ஐயன் திருவள்ளுவர் வகுத்துத் தந்துள்ள உலகப்பொதுமறை திருக்குறள்நெறி அடிப்படை யிலான ஓர் மக்கள் சமுதாயம் உருவாக வேண்டும் என்பதற்காக சென்னை வள்ளுவர் கோட்டத்தில்,
திருவள்ளுவர் ஆண்டு 2038 புரட்டாசி மாதம் 15 ஆம் நாள் (01-10.2017) அன்று திருவள்ளுவர் – திருக்குறள் பெயரில் செயல்படும் 22 அமைப்புகள் ஒன்று கூடி, உலகத் திருக்குறள் கூட்டமைப்புத் தொடங்கப்பட்டது.
உலகத்திருக்குறள் கூட்டமைப்பு தமிழ்நாடு சங்கங்கள் சட்டப்படியும், விதிமுறைகள் படியும், இந்திய அறக்கட்டளைச் சட்டவிதிமுறைகள் படியும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கூட்டமைப்பு பதிவு எண் 318/2018 ஆகும். அறக்கட்டளை பதிவு எண் 227/2018.
தமிழ்ப்பேராசான் திருவள்ளுவர் வகுத்துத் தந்துள்ள உலகப் பொதுமறையாம் திருக்குறள் வழிநின்று – சாதி வேறுபாடற்ற, மதசார்பு இல்லாத, மூடப்பழக்கங்கள் மற்றும் மதுப்போதைகளுக்கு இடம்கொடுக்காத, பிறப்பொக்கும் எல்லாம் உயிர்க்கும் என்னும்படியான, பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் பொருளாதார சமன்மையுடைய, இயற்கையோடு இயைந்த, அறிவியல் அறிவு பெற்ற, பகுத்தறிவுச் சிந்தனை கொண்ட, சமஉரிமை மற்றும் நீதியுடன் கூடிய சமத்துவ சமவுடைமைத் திருக்குறள் சமுதாயம் அமைத்தல் உலகத்திருக்குறள் கூட்டமைப்பின் இலக்கு ஆகும்.
குறிப்பாக, திருவள்ளுவர் – திருக்குறள் சார்ந்த இலக்கிய அமைப்புகள் மாணவர் சங்கங்கள் இளைஞர் மன்றங்கள், மகளிர் அமைப்புகள், ஆசிரியர் சங்கங்கள் பொறியாளர் அமைப்புகள், தொழிலாளர் அமைப்புகள், நவீன தொழில் நுட்ப ஊடகங்கள், கலைக்குழுக்கள், கணினிக்கழகங்கள், ஆய்வு மையங்கள், கல்வி நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் போன்ற பல்வேறு துறைசார்ந்த அமைப்புகளை ஒருங்கிணைத்தல். திருக்குறள் தொண்டர்களை ஒருங்கிணைக்கும் உறவுப் பாலமாக செயலாற்றுதல், திருக்குறள்நெறிவழி வாழ வழிகாட்டுதல்.